பொது

தனிநபர் வருமான வரிக்கு ஆயிரம் ரிங்கிட் வரை விலக்கு; சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும்

14/10/2025 06:25 PM

ஜாலான் பார்லிமன் கோலாலம்பூர், 14 அக்டோபர் (பெர்னாமா) -- 2026 வரவு செலவுத் திட்டத்தில் தனிநபர் வருமான வரியில், ஆயிரம் ரிங்கிட் வரை சிறப்பு விலக்கு அறிவிக்கப்பட்டிருப்பது, 2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டை முன்னிட்டு, உள்நாட்டில் பயணம் செய்வதற்கு மக்களை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளில் ஒன்றாகும்

உள்நாட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதோடு உள்ளூர் மக்களின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இந்நடவடிக்கை அமைவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

ரிங்கிட் மதிப்பு வலுபெற்றிருப்பதைத் தொடர்ந்து, அதிகரித்துள்ள வெளிநாட்டு சுற்றுலாவின் போக்கை இந்த முயற்சி வழி மீண்டும் சமநிலைப்படுத்த முடியும் என்று டத்தோஸ்ரீ அன்வார் நம்பிக்கைத் தெரிவித்தார்.

"ரிங்கிட் மதிப்பு வலுபெற்றால், ரூபாய் மற்றும் பாட்டின் மதிப்பு பலவீனம் பெறும் என்பதோடு, கவனம் அந்நாடுகள் பக்கம் திரும்பும். இதை நாங்கள் தீவிரமாக அடையாளம் கண்டு வருகிறோம். குறிப்பாக, நாட்டிற்குள் செலவிட ஆயிரம் ரிங்கிட் வரி விலக்கு வழங்குவது தொடர்பில்," என்று டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

ஏறக்குறைய இரண்டு லட்சம் மலேசியர்கள் அண்மையில் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றது மற்றும் ஐந்து கோடி ரிங்கிட் வரையில் அங்கு செலவிட்டது குறித்து தெப்ராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம்மி புவா வீ த்சே இன்று அமைச்சர்களுக்கான கேள்வி நேரத்தின்போது எழுப்பிய கூடுதல் கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.

அதேவேளையில் லங்காவி போன்ற பிரபலமான சுற்றுலாத் தளங்களில் தங்குமிடம் மற்றும் உணவின் விலை உட்பட உள்நாட்டு சுற்றுலாவின் விலை உயர்வு குறித்தும் பிரதமர் கவலை தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அவ்விவகாரம் தொடர்பில் ஆராய, இரண்டாவது நிதியமைச்சரும் கெடா மாநில மந்திரி புசாரும் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளதை அன்வார் சுட்டிக்காட்டினார்.
 
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு இரவு:1130 (ஆஸ்ட்ரோ 502)