கே.டி.என்.கே 4.5%-ஆக நிலைநிறுத்தப்பட்டது

03/03/2026 04:18 PM

கோலாலம்பூர், 03 மார்ச் (பெர்னாமா) -- அண்மைய நிச்சயமற்ற புவிசார் அரசியல் மற்றும் உலகளாவிய பதட்டங்களுக்கு மத்தியில், 2026-ஆம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி கே.டி.என்.கே-இன் இலக்கை 4.0-இல் இருந்து 4.5 விழுக்காடாக அரசாங்கம் நிலைநிறுத்தியிருக்கின்றது. 

முன்னதாக, 2026-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டதுபோல, அந்நிலைப்பாடு தொடர்வதாகவும் தற்போதைய பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் வெளிப்புற அபாயங்கள் உட்பட பல்வேறு காரணங்களையும் கருத்தில் கொள்வதாகவும் பொருளாதார அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முஹமட் நாசிர் தெரிவித்தார்.

''எனவே, நல்ல எண்ணிக்கை இருந்தபோது நான் உண்மையிலேயே என் நிலையைத் தக்க வைத்துக் கொண்டேன். 2026-ஆம் ஆண்டிற்கான இலக்கை உயர்த்த சொன்னீர்கள். ஆனால், இப்போது நாம் புவிசார் அரசியலை எதிர்கொள்கிறோம். அதனால்தான், அரசாங்கத்தைப் பொறுத்தவரை இந்த ஆண்டு எங்கள் இலக்காக 4 முதல் 4.5 விழுக்காடாக இருந்தது. கடந்த ஆண்டு நடந்ததைப் போலவே, நாங்களும் 4 முதல் 4.8 விழுக்காடாக நிலைநாட்டுகிறோம்,'' என்றார் அவர்.

இன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்மல் நஸ்ருல்லா அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

கடந்த ஆண்டின் நம்பிக்கையூட்டும் சாதனைகளைத் தொடர்ந்து, இலக்கை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் கோரிக்கை விடுத்தாலும், சவால் நிறைந்த தற்போதைய உலகளாவிய சூழலைக் கருத்தில் கொண்டு அணுகுமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் விளக்கினார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]