பொது

அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சி; தனிநபரிடமிருந்து வாக்குமூலம்

05/03/2026 04:24 PM

புத்ராஜெயா, மார்ச் 05 (பெர்னாமா) -- அரசாங்கத்தை கவிழ்த்து நாட்டின் நிலைத்தன்மையை சீர்குலைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு, தனிநபர் ஒருவரிடம் இருந்து போலீஸ் வாக்குமூலம் பெற்றுள்ளது.

கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி, இவ்விவகாரம் தொடர்பில் புகாரளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வாக்குமூலம் அளிப்பதற்கு சம்பந்தப்பட்ட நபர் தாமாகவே முன் வந்துள்ளார்.

நீண்ட வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில், அதனை முழுமையாக ஆராய போலீஸ் தரப்பிற்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.

''இதுவரை சம்பந்தப்பட்டவரிடமிருந்து வாக்குமூலம் பெற்றுள்ளோம். இன்னும் பல தனிநபர்கள் உள்ளனர். எனவே, இந்த ஆய்வுக்கு தொடர்புடைய சிக்கலை அடையாளம் காண ஒரு விரிவான நடவடிக்கை தேவைப்படுகிறது. ஒருவரிடம் மட்டுமே வாக்குமூலம் பெற்றிருக்கும் நிலையில், இன்னும் மூன்று அல்லது நால்வரை அழைக்க வேண்டும்,'' என்றார் அவர்.

இன்று, உள்துறை அமைச்சின் மாதந்திரக் கூட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முஹ்மட் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

நாட்டின் பாதுகாப்பு அம்சங்களை உட்படுத்தியிருப்பதால், இவ்விவகாரம் குறித்த விசாரணைக்கு விரிவான மற்றும் கவனமான அணுகுமுறை தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)