புத்ராஜெயா, 13 மார்ச் (பெர்னாமா) -- மேற்காசியாவில் புவிசார் அரசியல் பதற்றங்கள் நிலவினாலும், நோன்பு பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு நாட்டில் உணவு விநியோகம் போதுமானதாக இருப்பதால் மக்கள் பதற்றப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாண்டு மே அல்லது ஜூன் மாதம் வரையில் அரிசி, கோழி, காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்பட அடிப்படை உணவுப் பொருட்களின் விநியோகம் போதுமானதாக இருக்கும் என்று விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு தெரிவித்தார்.
''தற்போதைக்கு நாம் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அரிசி மோதுமானதாக உள்ளது. அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளது. கையிருப்பை ஒன்பது மாதங்களாக அதிகரித்துள்ளோம். இப்போது இருந்து அடுத்த ஒன்பது மாதங்கள் வரை அவை போதுமானதாக இருக்கும்'', என்றார் அவர்.
மக்கள் நியாயமான விலையில் உணவுப் பொருட்களைப் பெறுவதற்கு ஏதுவாக, AGRO மடானி மற்றும் ரஹ்மா விற்பனைத் திட்டங்கள் தொடர்ந்து மேம்படுத்தப்படும் என்று டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு தெரிவித்தார்.
மடானி சமூக முயற்சியின் வழி சந்தைகளில் காய்கறிகள் மற்றும் மீன்களின் கையிருப்பை அமைச்சு அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)