கோலாலம்பூர், மார்ச் 13 (பெர்னாமா) -- மலேசிய விமான போக்குவரத்து குழுமம் MAG-யின் கீழ் உள்ள விமான நிறுவனங்கள், நிலவும் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் கூடுதல் கட்டணங்களைத் தொடர்ந்து மதிப்பாய்வு செய்து வருகின்றன.
உலகம் முழுவதும் உள்ள விமான நிறுவனங்கள், எரிபொருள் விலை உயர்வையும், மேலும் மாறிவரும் புவிசார் அரசியல் சூழ்நிலைகளையும் கவனமாக கண்காணித்து வருகின்றன.
அவை இரண்டும் தொடர்ந்து விமானத் துறையில் செயல்பாட்டு செலவுகளையும் கட்டண அமைப்புகளையும் பாதித்து வருகின்றன.
தமது குழுமம் நம்பிக்கையான மற்றும் பாதுகாப்பான இணைப்பைப் பராமரிக்கும் அதே வேளையில், செலவுகளை நிர்வகித்து சமநிலைப்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக பெர்னாமாவிற்கு வெளியிட்ட ஓர் அறிக்கையில் MAG குறிப்பிட்டுள்ளது.
உலகளவில் எண்ணெய் விலை உயர்வைத் தொடர்ந்து மலேசியா ஏர்லைன்ஸ், ஃபயர் ஃபெலாய் மற்றும் பாத்தே ஏர் உட்பட பல முக்கிய விமான நிறுவனங்கள் எரிபொருள் கட்டணத்தை அதிகரித்துள்ளதாக X தளத்தில் Pemburu Tiket Murah என்ற பயனர் பதிவிட்டுள்ளார்.
ஃபயர் ஃபெலாய் விமான சேவையில் எரிபொருள் கூடுதல் கட்டண மாற்றம் இரண்டு கட்டங்களாக அமல்படுத்தப்படும் என்று, அந்நபர் மார்ச் 9 தேதி பதிவிட்டிருந்தார்.
மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனமும் இந்த மாற்றங்களை இரண்டு கட்டங்களாக செயல்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)