சிறப்புச் செய்தி

இந்திய இளைஞர்களிடையே தலைமைத்துவத்தை வலுப்படுத்தும் KEM GENRLS 2.0

16/03/2026 05:10 PM

கூலிம், 16 மார்ச் (பெர்னாமா) -- இந்திய இளைஞர்களை ஊக்குவித்து எதிர்காலத்தில் அவர்களை சிறந்த தலைவர்களாக உருவாக்க, MIYC எனப்படும் மலேசிய இந்திய இளைஞர் மன்றம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், இந்திய இளைஞர்களிடையே தலைமைத்துவத்தை வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட “KEM GENRLS 2.0” எனும் முகாம் நாட்டிலுள்ள வட மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு சிறந்த களமாக அமைந்தது.

கடந்த மார்ச் 13 தொடங்கி மார்ச் 15ஆம் தேதி வரை AKM எனப்படும் மலேசியக் குடிமைக் கழகத்துடன் இணைந்து, நடத்தப்பட்ட மூன்று நாள் முகாம் கெடா,கூலிம் தேசியத்துவப் பயிற்சி மையத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பினாங்கு மற்றும் கெடா ஆகிய மாநிலங்களில் உள்ள உயர்கல்விக் கழகங்கள், ஆசிரியர் கல்விக் கழகங்கள், இடைநிலைப்பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த மொத்தம் 94 பேர் இந்த முகாமில் பங்கேற்றனர்.

இதுபோன்ற குடிமைப் பயிற்சி முகாமில் இந்திய இளைஞர்களை ஈடுபடுத்துவது பெரிய சவாலாக இருந்தாலும், அவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த முகாமை நடத்தியதாக மலேசிய இந்திய இளைஞர் மன்றத் தலைவர் தனேஷ் பாசில் தெரிவித்தார்.

இதனிடையே, பல்வேறு துறைகளில் முதன்மை செயல்திறன் குறியீடு, KPI முன்னேற்றத்தை வெளிப்படுத்தினாலும், மக்களின் சுபிட்சக் குறியீடு KHI இன்னும் முழுமையான திருப்தி நிலையை அடையவில்லை என்பதை உணர வேண்டிய அவசியம் இருப்பதாக பிரதமரின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி சண்முகம் மூக்கன் தெரிவித்தார்.

அரசாங்கம் வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு சமூகமும் தங்களின் திறன்களை வளர்த்துக் கொண்டு முன்னேற வேண்டும் என்பதே நாட்டின் முக்கிய இலக்காகும் என்று நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகைப் புரிந்திருந்த அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)