அலோர் ஸ்டார், 18 செப்டம்பர் (பெர்னாமா) -- கெடாவில் தொடர் மழையினால் ஏற்பட்டிருக்கும் வெள்ளம் காரணமாக, அம்மாநிலத்தில் மேலும் ஐந்து தற்காலிக நிவாரண மையங்கள், பி.பி.எஸ் திறக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் அம்மாநிலத்தில் செயல்படும் 20 தற்காலிக நிவாரண மையங்களில், 2,267 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் மணி 12 வரை வெள்ளத்தில் 2,618 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மாலை மணி 4-க்கு அதன் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இருப்பினும் நெரிசலைக் குறைக்க பி.பி.எஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஆறு மாவட்டங்களில் உள்ள பி.பி.எஸ்-இல் சுமார் 603 குடும்பங்கள் தங்கியுள்ளதாகக் கெடா மாநில சமூக நலத்துறை இயக்குநர் டத்தோ சுல்கைரி சைனோல் அபிடின் தெரிவித்தார்.
இதனிடையே, மாலை வரை பினாங்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 623-ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை அதன் எண்ணிக்கை 635-ஆகப் பதிவாகியது.
பாதிக்கப்பட்டவர்கள் அம்மாநிலத்தில் செயல்படும் 11 பி.பி.எஸ்-இல் தங்கியுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)