பொது

எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு; செயற்குழு இன்னும் உருவாக்கப்படவில்லை

01/03/2025 05:45 PM

கூச்சிங், 01 மார்ச் (பெர்னாமா) --    எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான பரிந்துரை குறித்து கலந்துரையாடுவதற்கான செயற்குழு இன்னும் உருவாக்கப்படவில்லை.

தங்களின் பரிந்துரை குறித்த விரிவான அதிகாரப்பூர்வ ஆவணத்தை எதிர்கட்சி தரப்பு இன்னும் சமர்ப்பிக்காததே இதற்கு காரணம் என்று துணை பிரதமரும் அரசாங்க ஆலோசனை மன்றச் செயற்குழு தலைவர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப் தெரிவித்தார்.

''என்னிடம் பரிந்துரை கடிதம் இருந்தால் தான், செயற்குழுவை உருவாக்க முடியும். ஊடகத்திடம் பேசிவிட்டு எதையும் அமல்படுத்தாவிட்டால், எதுவும் செய்ய முடியாது. அதனால்தான் பரிந்துரை செய்யுங்கள் என்று நான் கூறுகிறேன். பரிந்துரை கிடைத்தால் நான் அரசாங்க அளவிலும் எதிர்கட்சி அளவிலும் செயற்குழுவை உருவாக்குவேன். அதன் பின்னர் நாங்கள் கலந்துரையாடலாம். ஆனால், தற்போது எதை கலந்துரையாட வேண்டும்? காரணம் அவர்கள் வேண்டாம் என்று கூறுகின்றனர்'', என்று அவர் கூறினார்.

சூராவில் கிராம மேம்பாடு மற்றும் பாதுகாப்பு செயற்குழு, ஜே.கே.கே.கே-விற்கு வருடாந்திர மானியம் வழங்கும் நிகழ்ச்சியில் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா அவ்வாறு குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட செயற்குழுவை உருவாக்குவதற்கு முன்னரே, துணை பிரதமருக்கு கடிதம் அனுப்ப வேண்டும் என்று தங்களுக்கு தெரிவிக்கப்பட்டது குறித்து எதிர்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளதாக நேற்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதனிடையே, தொழில்நுட்பத்தை துஷ்பிரயோகத்தை தடுப்பதோடு, பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க சரவாக்கின் பெட்ரா ஜெயா, கூச்சிங் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சமூகத் தலைவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, ஏஐ பயிற்சி பட்டறை நடத்தப்படவுள்ளதாக துணை பிரதமர்  டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப் கூறியுள்ளார்.

வருங்காலத்தில் இம்முயற்சியை, Microsoft Malaysia நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் என்று, பெட்ரா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.

''ஏஐ மற்றும் பிற தொழில்நுட்பங்களில் எவ்வாறு தேர்ச்சி பெற வேண்டும் என்பது எங்களது நோக்கங்களில் ஒன்றாகும். இலக்கு குழுவிற்கு வெளிப்பாடு வழங்கப்படுகிறது. முதலாவதாக சமூகத் தலைவர்கள், இரண்டாவது ஆசிரியர்கள் மற்றும் மூன்றாவது இளைஞர்கள் மற்றும் வணிகத் துறை. ஏனெனில், அவர்கள் தங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்த தொழில்நுட்பத்தை மாற்றியமைக்க வேண்டும்'', என்று அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)