கோலாலம்பூர், 17 ஏப்ரல் (பெர்னாமா) -- 2024-ஆம் ஆண்டு எஸ்.பி.எம் தேர்வுக்கான முடிவுகள், வரும் வியாழக்கிழமை, ஏப்ரல் 24-ஆம் தேதி வெளியிடப்படவிருக்கிறது.
நாடு முழுவதிலும் உள்ள 3,337 தேர்வு மையங்களில் நடைபெற்ற இத்தேர்வில் மொத்தம் 4 லட்சத்து ஈராயிரத்து 956 மாணவர்கள் பதிந்துக் கொண்டுள்ளதாக, கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மாணவர்கள், காலை 10 மணி முதல் தங்களின் பள்ளிகளில் தேர்வு முடிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
அதேவேளையில், தனிப்பட்ட முறையில் இத்தேர்வை எழுதிய மாணவர்களுக்கு, முடிவுகள் அஞ்சல் வழியாக அனுப்பப்படும் அல்லது அவர்கள் பதிவு செய்த மாநில கல்வித் துறையையும் தொடர்பு கொள்ளலாம்.
தேர்வு எழுதிய மாணவர்கள், myresultspm.moe.gov.my என்ற அகப்பக்கத்தின் வழி, இணையம் வழியாக தங்களின் தேர்வு முடிவுகளைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.
அதோடு, எஸ்.பி.எம், அடையாள அட்டை எண் மற்றும் தேர்வு பதிவு எண்ணை, எழுதி 15888 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பியும் மாணவர்கள் தங்களின் எஸ்.பி.எம் தேர்வு முடிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த செயல்முறை ஏப்ரல் 24-ஆம் தேதி காலை 10 மணி தொடங்கி ஏப்ரல் 30-ஆம் தேதி மாலை 6 மணி வரை பயன்பாட்டில் இருக்கும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)