பொது

ஆசியான் தொழிலியல் பூங்கா குறித்த முன்மொழிவுக்கு MITI ஆதரவு வழங்கும்

21/04/2025 05:58 PM

ஜோகூர் பாரு, 21 ஏப்ரல் (பெர்னாமா) --   ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலம், JS-SEZ-இல், ஆசியான் தொழிலியல் பூங்காவை அமைக்க முன்மொழியப்பட்டிருக்கும் முயற்சிகளுக்கு, சிங்கப்பூரின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு, MITI ஆதரவு வழங்கும் என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் அப்துல் அசிஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

விநியோகச் சங்கிலியின் செயல்திறன் மற்றும் மீள்தன்மையை மேம்படுத்துவதற்கான கூறுகள், குறிப்பாக, ஆசியான் உரையாடலின் போது, அதன் பங்காளிகளுடன் அது குறித்து பேசியதை டத்தோ ஶ்ரீ சஃப்ருல் சுட்டிக்காட்டினார்.

வட்டார பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கும், அதிக மதிப்புள்ள முதலீடுகளை ஈர்ப்பதற்கும், தொழிலியல் பூங்கா பங்களிக்கும் என்று அவர் கூறினார்.

"எனவே உண்மையில், JS-SEZ வெறும் இருதரப்பு கட்டமைப்பை விட அதிகமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இது முழு ஆசியான் மற்றும் அதற்கு அப்பாற்பட்ட ஒரு மதிப்புமிக்க முன்மொழிவாகும். ஆமாம், நாம் அடித்தளங்களை சரியாகப் பெற வேண்டும். ஆனால் நாம் தொடர்ந்து லட்சியமாக இருக்க வேண்டும். எப்போதும் முன்னேற பாடுபட வேண்டும். போட்டி கடுமையாக இருக்கும். எனவே நாம் வெறுமனே வழங்குவதை விட தனித்து நிற்க வேண்டும்'', என்று அவர் கூறினார்.

உலக அரங்கில் நிச்சயமற்ற தன்மைகள் இருக்கின்ற போதிலும், JS-SEZ-இன் நோக்கத்தைத் தொடர்ந்து புதுமைப்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் தங்கள் உறுதிப்பாட்டை மலேசியாவும் சிங்கப்பூரும் உறுதிப்படுத்தியுள்ளதாக, அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)