குவாந்தான், 23 ஏப்ரல் (பெர்னாமா) -- பகாங்கில் வரி செலுத்தத் தவறிய நில உரிமையாளர்கள் மீதான உரிமை பறிக்கும் அல்லது முடக்கும் நடவடிக்கை நிர்ணயிக்கப்பட்ட செயல்முறையின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகிறது.
எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதற்கு முன்னர், நிலுவையில் உள்ள தொகையைச் செலுத்த முன்னதாக நிலை உரிமையாளருக்கு அறிவிக்கை வழங்கப்படும் என்று பகாங் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ வான் ரொஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
பகாங் மாநிலம் முழுவதிலும் நில நிர்வகிப்பு தரப்பு, 1,082 நில உரிமையாளர்களின் உரிமையை முடக்கியுள்ளது.
வசூலிக்கப்பட்ட அதன் அபராத மதிப்பு 14 லட்சத்திற்கும் அதிகமாகும் என்று அவர் கூறினார்.
"சட்டவிரோதமாக நிலத்தை பயன்படுத்துவது மட்டுமின்றி, நில வரி செலுத்தாவிட்டால் நாங்கள் பறித்து விடுவோம். உதாரணமாக 6A நிலுவையில் இருப்பது. அவர்கள் நிலுவையில் உள்ள தொகையைச் செலுத்த அறிவிக்கை வழங்குவோம். ஆனால், அவர்கள் நிலுவையில் உள்ள தொகையைச் செலுத்தாவிட்டால், 8A செயல்முறையைப் பின்பற்றுவோம்", என்று அவர் கூறினார்.
இன்று, விஸ்மா ஶ்ரீ பகாங்கில் நடைபெற்ற பகாங் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் டத்தோ ஶ்ரீ வான் ரொஸ்டி அவ்வாறு குறிப்பிட்டார்.
நில வரி செலுத்தத் தவறியதன் காரணமாக நில உரிமை முடக்கம் செய்யப்பட்ட, திரும்ப வழங்கப்படாத சொத்துக்களின் எண்ணிக்கை குறித்து சட்டமன்ற உறுப்பினர் முஹமட் ஃபட்சிலி முஹமட் ரம்லி எழுப்பியக் கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)