கோலாலம்பூர், 26 டிசம்பர் (பெர்னாமா) -- அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மலேசிய பொது பூப்பந்து போட்டியை எதிர்கொள்ள ஆடவர் இரட்டையரான கோ சீ ஃபெய்-நுர் இசுடின் முஹமட் ரும்சானி ஆகியோர் தேசிய அணியுடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த ஜோடி வாரத்திற்கு இரு பயிற்சிகளில் ஈடுபடும் நிலையில், இது தேசிய ஆடவர் இரட்டையர் பிரிவுக்கு நன்மை பயக்கும் என்று அவர்களின் தலைமை பயிற்றுனர் ஹெரி ஐமான் பியெர்ங்காடி கூறினார்.
"மலேசிய பொது பூப்பந்து போட்டிக்கான தயாரிப்பாக இருக்கலாம். ஒருவேளை சுயமாக விளையாடுபவர்களுக்கான பயிற்சி குறைவாக இருக்கக்கூடும். அதனால் அவர்கள் இங்கு இணைந்து பயிற்சி மேற்கொள்வது, நமக்கும் அவர்களுக்கும் சமமாகப் பயனளிக்கும்", என்றார் அவர்.
தொழில்முறை ஜோடிகளும் தேசிய ஆடவர் இரட்டையர்களும் இணைந்து பயிற்சி மேற்கொள்வது, அவர்களிடையே ஆரோக்கியமான போட்டித் தன்மையை உருவாக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே, தொழில்முறை வீரர்களுடனான பயிற்சி தற்போது குறுகிய காலமாகும் என்றும், வரவிருக்கும் போட்டிக்கான முன் தயாரிப்புகளில் கவனம் செலுத்தப்படும் எனவும் ஹெரி கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)