புக்கிட் காயு ஈத்தாம், 25 பிப்ரவரி (பெர்னாமா) -- இன்று அதிகாலையில், புக்கிட் காயு ஈத்தாம் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தின் கொமண்டர் எஸ்.ஏ.சி முஹமட் நசாருடின் முஹமட் நசீரை ஏற்றிச் சென்ற வாகனம் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானது.
இருப்பினும், மலேசியா-தாய்லாந்து எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் நசாருடின் உயிர் தப்பியதாக கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஸ்லி அபு ஷாதெரிவித்தார்.
சந்தேக நபர்களில் ஒருவர் இரண்டு முறை சுட்டதாகவும், அவை வாகனத்தின் பின்புற வலது பக்கக் கதவிலும், முன்பக்க பயணிகளின் பக்கக் கதவிலும் பட்டதாக கூறிய அவர், அதிர்ஷ்டவசமாக பாதிக்கப்பட்டவருக்கு எவ்வித காயத்தை ஏற்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டார்.
சம்பவத்திற்குப் பின்னர், சந்தேக நபர்களை சுமார் ஒரு கிலோமீட்டர் வரையில் காரில் துரத்தியதாகவும், அவ்விருவரும் அருகிலுள்ள தொழில்துறைப் பகுதிகளில் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
போலீஸ் அனைத்து அம்சங்களிலிருந்தும் விசாரணை நடத்தும் என்றும், எல்லையில் குற்றங்களைச் செய்யும் எந்தவொரு கும்பலுக்கும் அதிருப்தி ஏற்படுவதற்கான சாத்தியத்தையும் அவர் மறுக்கவில்லை.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)