தெஹ்ரான், 17 மார்ச் (பெர்னாமா) -- தனது விளையாட்டாளர்களின் பாதுகாப்பு காரணமாக, அமெரிக்காவில் நடைபெற திட்டமிடப்பட்டிருக்கும் உலக கிண்ண காற்பந்தாட்டங்களை மெக்சிகோவில் நடத்துவது குறித்து, ஈரான் காற்பந்து கூட்டமைப்பு, உலக காற்பந்து சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
உலக கிண்ண காற்பந்தாட்டத்தில் ஈரான் பங்கேற்பதை தாம் வரவேற்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருந்தாலும், சொந்த பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவர்கள் அமெரிக்காவில் விளையாடுவது பொருத்தமானதாக இருக்காது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஈரான் அணியின் பாதுகாப்பை தம்மால் உறுதி செய்ய முடியாது என்று டிரம்ப் வெளிப்படையாகக் கூறியுள்ள நிலையில், தமது அணி நிச்சயமாக அமெரிக்காவுக்குப் பயணம் செய்யாது என்று மெக்சிகோவில் உள்ள ஈரானிய தூதரகத்தின் எக்ஸ் பதிவின் வழி, ஈரானிய காற்பந்து அணியின் தலைவர் Mehdi Taj குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் கலந்து கொள்ளும் ஆட்டங்களை மெக்சிகோவில் நடத்துவது குறித்து தமது தரப்பு ஃபிஃபாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டு ஜூன் 11-ஆம் தேதி தொடங்கி ஜூலை 19-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் உலக கிண்ண காற்பந்து போட்டியை, அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து நடத்தவிருக்கின்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)