பொது

வீட்டிலிருந்து பணிபுரியும் பரிந்துரை; தேசிய பொருளாதார நடவடிக்கை மன்றக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்

17/03/2026 05:44 PM

கோலாலம்பூர், 17 மார்ச் (பெர்னாமா) -- தேசிய பொருளாதார நடவடிக்கை மன்றம், MTEN-னின் அடுத்தக் கூட்டத்தில், BDR எனப்படும் வீட்டிலிருந்து பணிபுரிவது குறித்த பரிந்துரையின் ஆய்வை அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷம்சூல் அஸ்ரி அபு பாக்காரும், பொது சேவை துறை தலைமை இயக்குநர் டான் ஶ்ரீ வான் அஹ்மட் டஹலான் அசிஸூம் தாக்கல் செய்யவிருக்கின்றனர்.

இதன் தொடர்பில், பல அம்சங்களை கவனமாக ஆராய்ந்து, நோன்புப் பெருநாளுக்குப் பின்னர் நடைபெறவிருக்கும் MTEN கூட்டத்தில் முடிவெடுப்பதற்காக, தாக்கல் செய்யுமாறு இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim கேட்டுக் கொண்டதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

BDR-ஐ செயல்படுத்துவதில், கல்வி, சுகாதாரம் மற்றும் முன்னணி பணியாளர்கள் போன்ற முக்கியத் துறைகள் உட்படுத்தப்படாது என்று டத்தோ ஃபஹ்மி விவரித்தார்..

"பொது சேவை துறை ஊழியர்களுக்கான வீட்டிலிருந்து பணிபுரிவது தொடர்பாக, அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீயும் பொதுச் சேவை துறை தலைமை இயக்குநரும் தயாரித்த ஒரு தொடக்கக்கட்ட அறிக்கையை அமைச்சரவை இன்று பெற்றது. மேலும், பல அம்சங்களை இன்னும் தீவிரமாக ஆராய்ந்து, அடுத்த பொருளாதார நடவடிக்கைக் குழு அல்லது எம்-டென் கூட்டத்தில் முடிவெடுப்பதற்காகச் சமர்ப்பிக்குமாறு பிரதமர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்," என்றார் அவர்.

இந்த முன்னெடுப்பில் தனியார் துறை ஈடுபடுத்தப்படுமா என்பது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், அத்துறையில் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும், முதலில் அரசாங்க அளவில் கொள்கை ஒருங்கிணைப்பு தேவைப்படுவதாலும், தற்போதைய கலந்துரையாடல்கள் பொது சேவை துறை ஊழியர்களை உட்படுத்தியுள்ளதாகக் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)