பொது

இஸ்மாயில் சப்ரி இன்று மீண்டும் எஸ்.பி.ஆர்.எம் சென்றார்

24/04/2025 04:40 PM

புத்ராஜெயா, 24 ஏப்ரல் (பெர்னாமா) -- தம்மை உட்படுத்திய கையூட்டு மற்றும் கள்ளப்பண பரிமாற்றம் குறித்த விசாரணைக்கு உதவ, வாக்குமூலப் பதிவு செயல்முறையைத் தொடர்வதற்கு, முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று மீண்டும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் தலைமையகத்திற்குச் சென்றிருந்தார்.

நாட்டின் ஒன்பதாவது பிரதமரை ஏற்றி வந்த வாகனம் காலை மணி 11-க்கு அவ்வாணையத்தின் தலைமையகத்தைச் சென்றடைந்தது.

எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்தில் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் வாக்குமூலம் அளிப்பது இது எட்டாவது முறையாகும்.

2009-ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம் சட்டம் செக்ஷன் 36 (1)-இன் கீழ், அந்த முன்னாள் பிரதமர் தமது சொத்துகளை அறிவித்தது தொடர்பில், இம்முறை வாக்குமூலப் பதிவு மேற்கொள்ளப்படும் என்று எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார்.

2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி 2022-ஆம் ஆண்டு நவம்பர் வரை, பதவியில் இருந்தபோது மலேசியக் குடும்பத் திட்டத்தை விளம்பரப்படுத்துவதற்கான செலவு உட்பட நிதி பெற்றது தொடர்பில் ஊழல் மற்றும் கள்ளப்பண பரிமாற்ற வழக்கு குறித்து, பெரா நாடாளுமன்ற உறுப்பினருமான இஸ்மாயில் சப்ரியிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)