வட்டிகன், 09 மே (பெர்னாமா) -- அமெரிக்காவை சேர்ந்த 69 வயதுடைய ரோபர்ட் பிரிவோஸ்ட் புதிய போப் ஆண்டவராக நேற்று தேர்வு செய்யப்பட்டார்.
கத்தோலிக்க திருச்சபையின், ஈராயிரம் ஆண்டு கால வரலாற்றில் அமெரிக்காவைச் சேர்ந்தவர், போப் ஆக தேர்வாவது இதுவே முதன்முறை.
உலகம் முழுதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவரான 88 வயதுடைய போப் பிரான்சிஸ், இத்தாலியின் வட்டிகன் சிட்டியில் கடந்த மாதம் 21-ஆம் தேதி காலமானார்.
இதனையடுத்து, புதிய போப் தேர்வுக்கான நடைமுறைகளை கத்தோலிக்க திருச்சபை துவங்கியது.
போப் தேர்வு செய்யப்பட்டார் என்பதை சிஸ்டின் தேவாலயத்தில் பொருத்தப்பட்டுள்ள புகை போக்கியில் வெளியாகும் புகையின் நிறத்தை கொண்டு மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.
புகை போக்கியில் கறுப்பு நிற புகை வெளியானால் போப் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும், வெள்ளை நிற புகை வெளியானால் புதிய போப் தேர்வு செய்யப்பட்டார் என்றும் அர்த்தமாகும்.
இந்நிலையில், சிஸ்டின் தேவாலயத்தில் 80 வயதுக்குட்பட்ட அனைத்து கார்டினல்களும் கலந்து கொண்ட நேற்று இரண்டு கட்டங்களாக நடந்த தேர்தலில், புதிய போப் தேர்வு செய்யப்படவில்லை.
அதைத் தொடர்ந்து, நேற்றிரவு மீண்டும் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில், புதிய போப் தேர்வு செய்யப்பட்டதோடு அதன் அறிகுறியாக இரவு மணி 10:00க்கு புகைபோக்கியில் இருந்து வெள்ளை புகை வெளியேறியது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]