கோலாலம்பூர், 08 அக்டோபர் (பெர்னாமா) -- இன்று காலை காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றி சென்ற கப்பலை தடுத்து வைத்திருக்கும், இஸ்ரேலிய இராணுவத்தினரின் நடவடிக்கைக்கும், அனைத்துலக சட்ட மீறலுக்கும், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
'Freedom Flotilla Coalition' மற்றும் 'Thousand Madleens To Gaza' மனிதாபிமானப் பணியில் ஈடுபட்ட கப்பலில் பயணித்த மலேசியர்களையும், அனைத்துலக நீர்ப்பகுதியில் சட்டவிரோதமாக அவர்கள் தடுத்து வைத்துள்ளதாக அவர் கூறினார்.
காசா மக்களுக்கு உதவிப் பொருள்களை ஏற்றி சென்ற கப்பலை தடுத்து நிறுத்திய செயல் மனிதாபிமானமற்றது என்றும், உலகளாவியல் மனித உரிமைகளின் அடிப்படை கொள்கைகளை மீறுவது என்றும் பிரதமர் எடுத்துரைத்தார்.
இந்நிலையில், தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து மலேசிய ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவதோடு, அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கி, எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அன்வார் கேட்டுக் கொண்டார்.
மனிதாபிமான பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு மலேசியரின் உயிரையும் பாதுகாக்க தங்களால் முடிந்த அனைத்தையும் மடானி அரசாங்கம் மேற்கொள்ளும் என்று பிரதமர் உறுதியளித்தார்.
மேலும், அவர்களின் விடுதலையை எளிதாக்க, பங்காளி நாடுகள் மற்றும் அனைத்துலக அமைப்புகளைத் தாம் தொடர்புக் கொள்ளவிருப்பதாக அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)