பொது

மலேசிய-சீனா திவெட் பயிற்சி; 19 இந்திய மாணவர்கள் பங்கேற்பு

18/11/2025 05:44 PM

சீனா, 18 நவம்பர் (பெர்னாமா) --  மலேசிய-சீனா இளைஞர்களிடையே திவெட் எனப்படும் தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி ஒத்துழைப்பை வலுப்படுத்தும் புதிய முயற்சியாக, BELIA MAHIR ஏற்பாட்டில் இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ராவின் ஆதரவோடு MCYTT எனப்படும் MALAYSIA-CHINA YOUTH TVET TRAINING திட்டம் நடைபெற்று முடிந்திருக்கின்றது.

திவெட்டில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தலைமையில் சீனாவில் நடைபெற்ற இப்பயிற்சி திட்டத்தில் மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 19 இந்திய மாணவர்கள் கலந்து கொண்டனர்.

MCYTT திட்டத்தின் மூலம் மலேசியாவில் உள்ள கல்லூரி அல்லது பல்கலைக்கழக மாணவர்களைச் சீனாவிற்கு அழைத்து சென்று அங்குள்ள அதீநவீன தொழில்நுட்பங்கள், கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றை அறிந்து கொள்ள வாய்ப்பளிப்பதாக, BELIA MAHIR-இன் அதிகாரி தினேஷ் தர்மலிங்கம் கூறினார்.

அதன் அடிப்படையில் மித்ராவின் ஆதரவோடு 19 இந்திய மாணவர்கள் சீனாவிற்கு அழைத்து செல்லப்பட்டதாக அவர் கூறினார்.

"மலேசியாவைக் காட்டிலும் சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சி 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்னோக்கி உள்ளது. ஆக, அங்குள்ள தொழில்நுட்பங்கள், கலாச்சாரங்கள், நவீன வளர்ச்சிகளை நமது இந்திய மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் BELIA MAHIR இந்திய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புகின்றனர்", என்றார் அவர்.

சீனாவில் உள்ள ZHEJIANG TRAFFIC TECHNICIAN கல்லூரிக்கு சுமார் 12 நாள்கள் மேற்கொண்ட இப்பயணத்தில் இயந்திர மின்னணுவியல், ரோபோடிக் உட்பட இன்னும் பல துறைகள் குறித்து மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

"ஆளில்லா விமானம், டிரோனைச் செயல்படுத்துவது, அதனை எவ்வாறு பழுதுப்பார்ப்பது, எவ்வாறு செலுத்துவது, அதனை கையாளும் முறை போன்றவைகள் எங்களுக்குக் கற்பிக்கப்பட்டது. அதன் பிறகு இயந்திரங்களை எவ்வாறு கையாள்வது குறித்த வகுப்புகள் சில நாட்களுக்கு நடைபெற்றது. அதோடு, வாகன தொழிற்சாலைக்கும் எங்களை அழைத்து சென்றனர்", என்று தினேஷ் கூறினார்.

இதை தவிர்த்து, சீனாவில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் மலேசிய மாணவர்கள் தங்களின் படைப்புகளை வழங்கியது, பயணத்தின் முத்தாய்ப்பு அங்கமாக அமைந்ததாக தினேஷ் பெர்னாமா செய்திகளிடம் தெரிவித்தார்.

2023-ஆம் ஆண்டு தொடங்கிய இத்திட்டத்தில், ஆண்டுக்கு சுமார் 500 இந்திய மாணவர்கள் பங்கேற்க வாய்ப்பு வழங்கும் நிலையில், வருங்காலங்களில் அதன் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சில முயற்சிகளையும் தமது தரப்பு மேற்கொண்டு வருவதாக அவர் விவரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)