பொது

புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவம்; போலி தகவலைப் பரப்பிய நபரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்

10/04/2025 07:10 PM

சுபாங் ஜெயா, 10 ஏப்ரல் (பெர்னாமா) -- புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழப்பு நிகழ்ந்ததாக சமூக வலைத்தளங்களில் போலி தகவலைப் பரப்பிய நபரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சிடமிருந்து புகார் கிடைத்ததும் அதன் தொடர்பில் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.

“பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 500, தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் செக்‌ஷன் 233-இன் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது,” என்றார் அவர்.

இந்த வெடிப்பு சம்பவத்தில் உயிரிழப்பு நிகழ்ந்ததாக வெளியான தகவலை முன்னதாக சுகாதார அமைச்சு மறுத்திருந்தது.

அதோடு, அதன் தொடர்பில் போலீஸ் புகாரும் செய்திருந்தது.

இதனிடையே, இச்சம்பவத்தில் சொத்துக்கள் சேதமடைந்ததாகவும், பாதிக்கப்பட்டவர்கள் காயமடைந்தது தொடர்பிலும் போலீசார் இதுவரை 755 புகார்களைப் பெற்றுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)