பட்டர்வெர்த், 27 ஏப்ரல் (பெர்னாமா) -- இந்து ஆலயங்களை நிர்வகிப்பதற்கும் அதன் செயல்பாடுகளைப் பக்தர்களுக்கு பகிரும் வகையிலும் நாடு முழுவதும் உள்ள இந்து வழிபாட்டுத் தலங்களை இலக்கவியல்மயமாக்கும் முயற்சிகளுக்கு அதன் அமைச்சு தொடர்ந்து உதவி புரிந்து ஆதரவளிக்கும்.
இலக்கவியல் வளர்ச்சியில் எந்தத் தரப்பினரும் பின்தங்கிவிடக் கூடாது என்ற நோக்கத்துடன், சமயம் மற்றும் கலாச்சாரம் அடங்கிய இலக்கவியல் தொழில்நுட்பம் அடிமட்ட மக்களையும் சென்றடைவதை உறுதி செய்வது அரசாங்கத்தின் உறுதிப்பாடாகும் என்று அதன் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
ஆலய நிர்வாகத்தை நவீனம் மற்றும் முறையான நிலைக்குக் கொண்டுவரும் இலக்கவியமயமாக்கல் உட்பட கியோஸ்க் அமைப்புடன் அறிமுகப்படுத்தப்பட்ட இச்செயலி LWHNPP எனப்படும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் மற்றொரு முன்னேற்றமாகும்.
''இச்செயலி, செயல்முறையை எளிதாக்குகிறது. அதாவது இச்செயலியைப் பயன்படுத்தி ஆலயங்களுக்கு வெளியில் இருந்தவாறே அனைத்து ஏற்பாடுகளையும் செய்யலாம். இதனால் நமது நேரத்தை மிச்சப்படுத்துகிறது. நமது செலவுகளையும் குறைக்கிறது. மேலும் ஆலய விழாக்கள் தொடர்பான தரவுத்தளத்தையும் உருவாக்கும். செயல்பாட்டில் சிக்கல்கள் இருந்தால், சிக்கலைத் தீர்த்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளலாம்,'' என்றார் அவர்.
நேற்றிரவு, பினாங்கு, பட்டர்வெர்த்தில் நடைபெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் மற்றும் LWHNPP கீழ் செயல்படும் ஆலயங்களின் நிர்வகிப்பு அமைப்பு இலக்கவியமயமாக்கல் தொடக்க விழாவில் கலந்துகொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
இதனிடையே, இந்த இலக்கவியல்மயமாக்கல் முன்னெடுப்பு பினாங்கில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் கூடியவிரைவில் மேற்கொள்ளப்படும் என்று LWHNPP தலைவர் ஆர்.எஸ்.என் ராயர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்காக கோபிந்த் 20,000 ரிங்கிட் ஒதுக்கீட்டிற்கும் ஒப்புதல் அளித்தார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]