உலகம்

கியூபா படைகள் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்; நால்வர் பலி

26/02/2026 01:46 PM

அமெரிக்கா, 26 பிப்ரவரி (பெர்னாமா) -- ஃபுளோரிடாவில் இருந்து வந்த படகு ஒன்று கியூபா கடல் எல்லைக்குள் நுழைந்து அதன் படைகள் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தியதில் நால்வர் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவத்தில், மேலும் எழுவர் காயத்திற்கு ஆளானதாக கியூபாவின் உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அந்தத் தாக்குதலுக்கு கியூபாவின் படை பதிலடி கொடுத்த வேளையில், உயிரிழந்த நால்வரும் ஃபுளோரிடாவைத் தளமாகக் கொண்ட படகில் இருந்தவர்கள் ஆவர்.

காயமடைந்த அந்நிய நாட்டு தாக்குதல்காரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாக கியூபா தெரிவித்துள்ளது.

கியூபாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இச்சம்பவம் நடந்துள்ளது. 

இதனிடையே, இத்தாக்குதல் சம்பவம் குறித்து வாஷிங்டன் சுயமாக சரிபார்ப்பைச் செய்து, சொந்த முடிவுக்கு வரும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.

அதோடு, இது அமெரிக்காவின் நடவடிக்கை அல்ல என்றும் தங்கள் அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் இதில் ஈடுபடவில்லை என்றும் ரூபியோ செய்தியாளர்களிடம் கூறினார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]